தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்று முதல் கருத்து கேட்பு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்று முதல் கருத்து கேட்பு

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும்
என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 10 மாத காலமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும்
மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை
கவனித்து வந்தனர். இந்த சூழலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் 9
முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கடந்த நவம்பர்
மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெற்றோர் பள்ளிகள் திறப்புக்கு
எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது.இதை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள்
திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததுடன், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள்
திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியது.
இந்நிலையில் தமிழகத்தில் திறப்பு குறித்து இன்று முதல் கருத்து கேட்கப்படும்
என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையதில் ரேஷன்
அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில்
எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும்.மாணவர்கள் –
பெற்றோர்களிடம் இந்த வாரம் இறுதிவரை கருத்து கேட்கப்படும்.பள்ளிகள் திறந்த உடன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய
அவர், பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்த அரசாணை விரைவில்
வெளியிடப்படும்” என்றார்.